கடந்த பருவமழை சமயத்தில் ஒருநாள் மழைக்கே அதிரையின் பிரதான தெருக்களில் நீர் தேங்கியது. அப்போது நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசர அவசரமாக வடிகாலை தூர்வாரினர். அந்த சமயத்தில் சேது ரோட்டிலிருந்து புதுத்தெரு தென்புறத்திற்கு செல்ல கூடிய சாலை துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையை மீண்டும் சேது சாலையோடு இணைக்க உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவசர காலங்களில் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் தொடர்கிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூர்வாரிய சமயத்தில் அங்குள்ள கடைகளுக்கு செல்லுவதற்காக வடிகால் மேல் போடப்பட்ட கருங்கல் கான்கிரீட் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் கடைக்கு செல்வதற்கான பாதையை அவரவர்களே விரைவாக சரி செய்துக்கொண்டனர். ஆனால் மக்களின் வரி பணம் மூலம் இயங்கும் நகராட்சி நிர்வாகம், 15 அடிக்கு சாதாரணமாக சிமெண்ட் குழாய் போட கூட முடியாமல் திண்டாடுவது நகராட்சி நிர்வாகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.