அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மம் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வியாழக்கிழமை திமுக தலைமை வழங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முடிவை நகர திமுக துணை செயலாளர் அன்சர் கான் மிக கடுமையாக விமர்சித்து ஆடியோ வெளியிட்டார். இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை கோட்டூரார் ஹாஜா முகைதீனை நேரில் சந்தித்த திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகத்திற்கு முழு ஆதரவை தெரிவித்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தையும் ஃபோனில் பேச வைத்து நம்பிக்கையூட்டினார்.
ஆனால் அன்று பிற்பகல் நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் தில்நவாஸ் பேகத்தின் வேட்பு மனுவில் முன்மொழியவும் வழிமொழியவும் கூட அதிருப்தி திமுக கவுன்சிலர்கள் யாரும் முன்வரவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முன்னாள் சேர்மன் S.H.அஸ்லத்தின் மனைவியும் திமுக கவுன்சிலருமான சித்தி அய்ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் அய்ஷா பவ்ஜில் ஆகியோர் தில்நவாஸ் பேகத்தை முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
இதனிடையே காலை வரை தில்நவாஸ் பேகத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் திடீரென நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். இதனால் நடைபெற்ற வாக்குப்பதிவில் 20 வாக்குகளை பெற்று நகராட்சி மன்ற துணை தலைவராக கூட்டணி தர்மத்தை மீறி இராம.குணசேகரன் வெற்றிபெற்றார். திமுக தலைமையின் ஆதரவுபெற்ற தில்நவாஸ் பேகத்திற்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
பின்னர் வெளியில் வந்த இராம.குணசேகரனை பார்த்து தில்நவாஸ் பேகத்தின் கணவர் கோட்டூரார் ஹாஜா முகைதீன் நியாயம் கேட்டார். அதனை எல்லாம் சட்டை செய்யாமல் தனது ஆதரவாளர்கள் புடைசூழ இராம.குணசேகரன் நகர கட்சி அலுவலகத்திற்கு கால் நடையாக சென்றார். கூட்டணி தர்மத்திற்கு எதிராக பெற்ற வெற்றியை அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி திமுக கவுன்சிலர்களும் வெடி வைத்து கொண்டாடினர்.
இத்தகைய சூழலில் கடும் கோபமடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி தர்மத்திற்கு எதிராக வெற்றி பெற்ற பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு திமுக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.