வெளிநாடுவாழ் அதிரையர்களின் சொத்துக்கள் உள்ளூரில் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. அதனை வேலி அடைத்து பாதுகாக்கவும் அவ்வப்போது சென்று பார்வையிடவும் கூட பலரும் முன்வருவதில்லை. இது கெஞ்சத்தனமா அல்லது சிக்கனமா? என தெரியவில்லை. ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல், போலியாக ஆவணங்கள் தயார் செய்து விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தாயகத்தில் சொத்துக்கள் வாங்க கூடிய வெளிநாடுவாழ் அதிரையர்கள், உரிய முறையில் ஆய்வு செய்து நம்பகமான நபர்களிடம் இருந்து மட்டும் சொத்துக்களை வாங்கவும். ஏற்கனவே வாங்கிய சொத்துக்களின் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து உடனடியாக அங்கு வேலி அடைத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
சொத்துக்களை விற்க விரும்புவர்கள் முன்னறிமுகம் இல்லாத நபர்களிடம் சொத்துக்களுக்கான ஆவண நகல்களை கொடுத்துவிட வேண்டாம். அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். பத்திர பதிவுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக பத்திரங்களை எழுத செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களின் விபரம் சொத்துக்களின் விபரங்கள் மற்றும் எழுத்து நடை சரியாக இருக்கிறதா? என சொத்துக்களை வாங்குபவரும் எழுதி கொடுப்பவரும் நன்கு படித்து உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
விற்பவரும் சும்மா விற்கவில்லை, வாங்குபவரும் எதையும் இலவசமாக பெறவில்லை. ஆதலால் சுடுது மடியப்பிடி என்ற ரீதியில் இல்லாமல் நிதானமாக பத்திரப்பதிவை மேற்கொள்வது தான் சிறந்தது. இதனால் ஒரே இடம், 2 பேருக்கு விற்கப்படுவதை தவிர்க்கலாம்.