மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 10ம் தேதியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளது. வங்க கடலை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் கனமழை பொழிவு உள்ளதால், பல இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழைபொழிவானது, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தது.
மேலும், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில், இன்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இதன்காரணமாக நாளை மறுதினம் வரை கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. கோயம்பேடு, கிண்டி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, அண்ணா நகர், மாம்பலம், புரசைவாக்கம் உள்ளிட்ட தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பொழிவு இருந்தது. இதன்காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதேபோல, சென்னையை ஒட்டியுள்ள வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போன்ற இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 10ம் தேதியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஒடிசா-ஆந்திரா பகுதியை நோக்கி செல்லும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. வங்க கடலை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.