கட்டுமான பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை முடிந்து, தற்போது இயல்புநிலை மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பொருட்களின் நிலை மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செயற்கையான விலையேற்றம் காரணமாகவே கட்டுமான பொருட்களின் விலை உயர்வதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மாநிலத்தில் இருக்கும் சூழலை உற்பத்தியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அரசியின் நிலைப்பாடு.
கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து முதல்வரின் அறிவுத்தல்படி சிமெண்ட் விலையேற்றம் குறித்து சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களிடம் பேசினோம். மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று உற்பத்தியாளர்களிடம் கூறியுள்ளோம்.
சம்மந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் உடனே விலை குறைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இந்த கூட்டத்தில் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.
இதில் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு, கட்டுமான பொருட்களின் விலையைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தானாக முன்வந்து குறைக்க வேண்டும். இல்லையென்றால், அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.