தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 2ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனினும், வழக்கமான வேகத்தில் அல்லாமல் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றி வாக்குகள் எண்ணப்படுவதால் ஒவ்வொரு சுற்றுக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வரும் முகவர்கள், கொரோனா பரிசோதனை நெகட்டிவ் முடிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். இல்லாவிட்டால், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களும் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.