இடதுசாரிகள் கூட்டணி ஒரு வேளை வெற்றி பெற்றால், திங்கள் அன்றே பதவியேற்பு விழா நடத்த ஏற்பாடுகளை செய்யுங்கள் என வாய்மொழியாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளையே முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால், அரசியல் கட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன.
கேரளத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஆளும் இடதுசாரிக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.
ஒருவேளை இடதுசாரிகள் வென்றால் மறுநாள் திங்கள்கிழமையே பதவியேற்பு விழாவை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாராம்.
கொரோனா தொற்று மிக வேகமெடுத்திருக்கும் நிலையில், கேரளத்தில் உடனடியாக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மறுநாளே பதவியேற்பு விழாவை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்கும் முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும், அன்றைய தினம் முதல்வர் மட்டுமோ அல்லது அவருடன் 3 அல்லது 4 மூத்த அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ளும் வகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வாய்மொழி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு சில நாள்களில் பதவியேற்பு விழா நடைபெறும். 2016-ஆம் ஆண்டில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 6 நாளைக்கு பின்னரே முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் உடனே அரசு அமைய பினராயி இந்த முறை விரும்புகிறாராம்.
பொதுவாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்படும் அவர்கள் முதல்வரை தேர்வு செய்யப்பட வேண்டும். பிறகு ஆளுநரை சந்தித்து பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு கோர வேண்டும். ஆளுநர் அழைப்பு விடுத்ததும் பதவியேற்பு விழா நடைபெறும் இதுவே வழக்கம். இவை அத்தனையையும் ஒரே நாளில் பினராயி விஜயன் செய்ய வேண்டியதிருக்கும். எனினும் சாத்தியம் இல்லாத ஒன்று இல்லை. ஆனால் அதற்கு முன் தேர்தல் முடிவுகள் என்ன வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.