கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
குஜராத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 9,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.
இந்த நிலையில் குஜராத் மாநில அரசு கொரோனா பிரச்சனையை சரியாக கையாளவில்லை; கொரோனா தொடர்பான புள்ளி விவரங்களை மறைத்து வருகிறது என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பல பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் உயர்நீதிமன்றமும் தாமே முன்வந்து வழக்கு பதிவு செய்தும் விசாரிக்கிறது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே குஜராத் மாநில பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
இதனிடையே குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், பார்கவ் கரியா ஆகியோர் நேற்று விசாரணையின் போது, குஜராத் மாநில அரசு கொரோனா பரிசோதனை விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இவற்றை பகிரங்கமாக வெளியிடுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? கொரோனா தொடர்பான உண்மையா நிலவரம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
கொரோனா தொடர்பான உண்மையான விவரங்களை மறைப்பதால் மாநில அரசுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் குஜராத் அரசு நேர்மையாக- வெளிப்படைத்தன்மையாக நடந்து கொள்வது கட்டாயம். இதுவரை மாநில அரசு கொடுத்த தகவல் துல்லியமானவையாகவும் இல்லை என விமர்சித்தனர்.