தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
பலத்த பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இறுதியாக மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவச உடை அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவானது நிறைவுபெற்றது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைக்கும் பணி தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதேபோல் இன்று தேர்தல் நடைபெறும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுவையிலும் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.