தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்தை அணிவது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மீண்டும் 2-வது அலை வரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வந்தனர்.
இதை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கடடுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் சம்மந்தப்பட்ட துறைகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய கட்டுப்பாடுகள் அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,
1. பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்.
2. அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய உறுதிபடுத்த வேண்டும்.
3. மேற்சொன்ன நெறிமுறைகள், அனைத்து இடங்களிலும்(நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில்) பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.
4. கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நெறிமுறைகளாகிய மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொது குழாய் இருக்கும் இடம், பொது கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாக தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல், போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
5. கோவிட் தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்கவேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரியநேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.
6. கூட்டாக நோய் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
7. காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
8. நோய் தொற்று உள்ள இடங்களில் நோய் தொற்றை தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
9. தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்யவேண்டும்.
10. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும்.
11. மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், கலாச்சார, வழிப்பாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம், என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிபடுத்திட வேண்டும்.
12. மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கிய பங்காக கொரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியாளர்கள்மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் தொடர்ந்து எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.