நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் 562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு தமிழகம், கேரளா உள்பட தென்மாநிலங்கள் அனைத்திற்கும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எச்சரித்தது.
இந்நிலையில் தான் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ – பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தால் இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆந்திரா, புதுவை, கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ – பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா பிரேசில், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நேரடியாக வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே இ பாஸ்க்கு விண்ணப்பிக்க முடியும். 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விமான நிலையத்தில் வந்த உடன் அவர்களுக்கு சோதனையும் நடத்தப்படும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழை https://www.newdelhiairport.in/ என்ற இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இனி அங்கிருந்து வந்தால் இபாஸ் கட்டாயமாகும். எனினும் அரசு முன்பு போல் கடுயைமாக நடந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. வெளிமாநிலங்களுக்கு ஆட்டோ இபாஸ் முறையை அமல்படுத்தி உள்ளது.