அதிரை கடற்கரை தெருவில் டி.எஸ்.பி புகழேந்தி தலைமையிலான ஆண் காவலர்கள் நள்ளிரவு வீடுகளுக்குள் புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக அதிரை அனைத்து முஹல்லாஹ் மற்றும் இயக்கங்கள் சார்பில் காவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், அதிரை காவல் நிலையத்தில் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையை அனைத்து முஹல்லாஹ் மற்றும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடன் நடத்தினர். அப்போது காவல்துறை தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தனர். இந்த சூழலில் காவல் நிலையத்திற்குள் நடந்தது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் விசாரித்தது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சிலர், வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ததில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என காவல்துறை அதிகாரிகளிடம் தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் பெண்கள், குழந்தைகள் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் நள்ளிரவு வீடுகளுக்குள் டி.எஸ்.பி புகழேந்தி தலைமையிலான ஆண் காவலர்கள் புகுந்ததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தோம். இதனை தொடர்ந்து அந்த சம்பவத்திற்கு காவல்துறை அதிகாரிகள் கூட்டாக வருத்தம் தெரிவித்தனர். இருந்தபோதும் அப்பாவி பெண்கள் குழந்தைகளிடம் அன்றைய தினமே காவல்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த சூழலில் வரும் 26ம் தேதி 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில் தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றனர்.
அப்பாவி பெண்கள் ஒன்றும் அறியா குழந்தைகளை அச்சுறுத்திய டி.எஸ்.பி புகழேந்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் பதில் என்னவாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.