திமுக பரப்புரை செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா, ஏன் மோடி பரப்புரை செய்தால் அது பரவாதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். சுமார் 100 நாட்கள் இந்த பிரசாரத்தை அவர் நடத்தவுள்ளார். இந்த நிலையில் திருக்குவளையில் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு நாகையில் ஒரு மேடையில் உதயநிதி பேச தொடங்கினார்.
அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பிரசாரத்திற்கு அனுமதி மறுத்து உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து விட்டு நேற்று மாலை விடுவித்தனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், திமுக பரப்புரை செய்தால் மட்டும்தான் கொரோனா பரவல் குறித்து அரசுக்கு தெரியுமா? பீகாரில் மோடி, அமித்ஷா பரப்புரை நடத்தினர்; தீபாவளிக்கு கூட்டம் கூடியது ; அப்போதெல்லாம் பரவாதா ?
திட்டமிட்டபடி வரும் மே மாதம் வரை 100 நாட்களுக்கு பிரசாரத்தை நடத்துவேன். தமிழக முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி பிரசாரங்களை நடத்தி வருகிறார். அதை யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால் என்னை மிரட்டுகிறார்கள்.
திமுக தலைமை முடிவு செய்யும் இடத்தில் நான் போட்டியிடுவேன். அதிமுக ஆட்சியே ஊழல் ஆட்சி. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும் சீமான் கூறுகிறார்.
இதுவும் அவரது சொந்த கருத்து. யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியுடன் புதிதாக கட்சிகள் சேர்வதும், ஏற்கனவே இருக்கும் கட்சிகள் விலகுவது குறித்தும் தலைமை கழகம் முடிவு செய்யும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
Your reaction