சென்னையிலிருந்து, பீஹார் மாநிலம், பாட்னாவிற்கு, நேற்று பகல், 12:20 மணிக்கு, விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, பிரவீன் குமார் ஷர்மா, 40 என்பவர், விமானத்தில் ஏறி, அவருக்கான இருக்கையில் அமர்ந்தவுடன், சிகரெட் எடுத்து, பற்ற வைத்தார். இதைக்கண்ட விமான ஊழியர்கள், ‘விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், விமானம் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது’ என்றனர். பிரவீன் குமார், எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சிகரெட் பிடித்தார். இதுகுறித்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து, பிரவீன் குமாரை விமானத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரை மேல் விசாரணைக்காக, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.