கர்நாடகாவில், நவம்பர் 17ம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளையும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாணவர்கள், வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாகவும் படிக்க முடியும். கல்லூரி வர வேண்டுமா, வீட்டிலிருந்து படிக்க வேண்டுமா என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை கல்லூரி வந்து படிக்க விரும்பினால், அவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எத்தனை மாணவர்கள் இதற்கு தயார் என்பதை பொறுத்து, எத்தனை பிரிவுகளாக வகுப்பை பிரித்து நடத்தலாம் என்று ஆசிரியர்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் டாக்டர். அஸ்வத் நாராயணன் கூறுகையில், யூஜிசி பரிந்துரைப்படி, அக்டோபர் முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் நிலைமையை பார்த்து, கல்லூரிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு நவம்பர் 17ம் தேதி கல்லூரிகளை திறப்பது சரியாக இருக்கும் என்று இப்போது முடிவு செய்துள்ளோம். கல்லூரிகள், ஹாஸ்டல்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.