கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில், ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து நேற்று மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகள் தொடர்பாக மாநில அரசு இன்று வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு, மேலும் சில தளர்வுகளோடு (நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் :
- தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மற்றும் இதர வாகனங்கள் வழியாக தமிழகத்துக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் Auto-generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாகப் பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும்.
- மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 7.9.2020 முதல் செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் வணிக வளாகங்களில் இருக்கும் திரையரங்குகள் இயங்கத் தடை தொடரும்.
- சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.
- தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. பார்சல் சேவை 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
- தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி.
- ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து
- உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக பூங்காங்கள், விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் திறக்க அனுமதி.
- தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
- வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
- நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலைவாசல் ஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்வதைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.
- திரைப்படப் படப்பிடிப்பு உரிய வழிகாட்டு நடைமுறைகளோடு அனுமதிக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் 75 பேருக்கு மேல் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
- மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் இயங்கும். மாநிலத்துக்குள் ரயில் போக்குவரத்து 15.9.2020 வரை அனுமதி இல்லை. அதன்பிறகு சூழல்கருதி முடிவெடுக்கப்படும்.
தொடரும் தடை :
- மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடத் தடை.
- நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதத் தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்.
- பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கத் தடை.
- திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவவும், உரிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.