தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரப்பகுதியில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று. தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 375 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பட்டுக்கோட்டையில் நகரில் மட்டும் இன்று வரை 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 4 பேர்
உயிரிழந்துள்ளனர்.
தொற்று வேகமாக பரவி வருவதாலும், உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதாலும் பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் மிகவம் அச்சத்திலும், கடும் பீதியிலும் உள்ளனர். இதனிடையே இன்று பட்டுக்கோட்டை நகரத்தில் மட்டும் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய 3 இளநிலை உதவியாளர்களும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் இன்று மூடப்பட்டுள்ளது. நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.