நேற்று 18.07.2020ந் தேதி சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில், பரவி வரும் கொரோனா நோய் தொற்று குறித்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக, அதிரை சாரா திருமண மண்டபத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி, அதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள், மற்றும் அதிரை சார்ந்த கிராமங்களின் தலைவர்கள், அரசியல் கட்சியினர், வணிக சங்கங்கள், சமுதாய இயக்கங்களின் கலந்தாய்வு கூட்டம் ஜனாப். M.S. ஷஹாபுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள், மாரியம்மன் கோவில் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக் கரை, கீழத் தோட்டம் உள்ளிட்ட கிராமங்களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திந் முடிவில் கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை பின் வருமாறு:
தீர்மானம் – 1
அதிரையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வரும் 20.07.2020 திங்கள் முதல் 25.07.2020 சனிக்கிழமை வரை, அனைத்து வணிக நிறுவனங்களும் காலை 6:00 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு ஊர் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் – 2
அதிராம்பட்டினம் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கு, வெளியூர்களில் இருந்து வருகை தரும் மக்களை கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் – 3
நமதூரில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டும் பொருட்களை விநியோகிம் செய்ய இந்த கூட்டத்தின் மூலம் அனைத்து வணிகர்களையும் கேட்டுக் கொள்கிறது. மேலும் பொது மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 4
அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் அனைத்து தேநீர் கடைகள், உணவகங்கள் நடத்தும் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வரும் நுகர்வோருக்கு பார்சல் மூலம் மட்டுமே உணவு பொருட்களை வினியோகிக்க வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தீர்மானம் – 5
அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் மருந்தகங்கள், பால் வினியோகிப்பாளர்கள், உணவகங்கள் ( இரவு 8:00 மணி வரை மட்டும்) வழக்கமான முறையில் இயக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் – 6
நமதூரில் உள்ள பகுதிகளில் வாழும் எவருக்கேனும் கொரோனா நோய் தொற்று இருப்பதாக அறியப்பட்டால், உடனே அவரவர் சார்ந்துள்ள ஜமாஅத்தார்களையோ, அல்லது கிராம தலைவர்களையோ தொடர்பு கொண்டு உரிய மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும் என நமதூர் பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தீர்மானம் – 7
நமதூரில் வாழும் பொது மக்கள் யாரும் தேவையில்லாமல் கூட்டமாக பொது இடங்களில் கூடுவதோ, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றவதின் மூலமாகவோ நோய் பிறருக்கு தொற்ற காரணமாக இருக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அப்படி மீறுவோர் மீது நமதூர் காவல் துறையினர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 8
நமதூர் உள்ள 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எவரும் பொதுவெளியில் நடமாட வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.
தீர்மானம் – 9
நமதூரில் உள்ள இளைஞர்கள் எவரும் பொதுவெளியில் விளையாடோவோ, கேளிக்கைகளிலோ ஈடுபட வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அப்படி மீறுவோர் மீது நமதூர் காவல் துறையினர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது.