உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் 57 பெண்கள் உள்பட சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அந்த 57 பேரில் இரு சிறுமிகள் உள்பட 5 பேர் கர்ப்பிணியாக உள்ளனர். அந்த இரு கர்ப்பிணி சிறுமிகளில் ஒருவருக்கு எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.
கான்பூர் நகரில் அரசு சார்பில் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு ஆதரவற்ற பெண்களும் சிறுமிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து ஜூன் 18-ஆம் தேதி இங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 33 பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அடுத்த இரு நாட்களில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது.
அரசு காப்பகத்தில் தங்கியிருந்த 7 பேரில் இரு சிறுமிகள் உள்பட 7 பேர் கர்ப்பமாக இருப்பதும் மற்ற 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கான்பூர் காவல் ஆணையர் சுதீர் மகாதேவ் கூறுகையில் குழந்தைகள் நல ஆணையத்தின் மூலம் ஆக்ரா, கன்னோஜ், ஃபெரோசாபாத், கான்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள், சிறுமிகள் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களில் 5 பேர் கர்ப்பிணியாக உள்ளனர். இவர்களில் இருவர் சிறுமிகள். ஒருவருக்கு எச்ஐவி நோய் உறுதியாகியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கு தங்கியுள்ளவர்கள் கர்ப்பமானது குறித்து காப்பகத்தின் அதிகாரி அல்லது ஊழியரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். இதனிடையே யோகி ஆதித்யநாத் அரசை உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும் விசாரணை என்ற பெயரில் உண்மைகள் மறைக்கப்படுவதாக பிரியங்கா குற்றம்சாட்டியிருந்தார்.
பீகாரில் உள்ள அரசு காப்பகத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டதும், அதற்கு மறுக்கும் சிறுமிகள் கொலை செய்யப்பட்டு அந்த வளாகத்தில் புதைக்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கான்பூர் அரசு காப்பகத்தில் சின்னஞ்சிறு சிறுமிகள் கர்ப்பமானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.