தமிழகத்தில் இனி கடைகளில் பொருட்கள் வாங்க, சாப்பிட செல்லும் நபர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறைய முக்கியமான விதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நாடு முழுக்க ஊரடங்கில் நாளை முதல் முக்கிய தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. அன்லாக் 1.0 என்ற திட்டத்தின் கீழ் நாளை கோவில்கள், மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது. இந்த தளர்வுகள் மொத்தம் மூன்று கட்டமாக நாடு முழுக்க அமலுக்கு வரும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்போதும் போல கட்டுப்பாடுகள் தொடரும். நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும். தமிழகத்தில் நாளை இதே தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களின் 50% கூட்டத்துடன் ஹோட்டல்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மால்கள், ஷாப்பிங் காம்பிளக்ஸ் பகுதிகள் நாளை முதல் தமிழகத்தில் எப்போதும் போல இயங்கும். இது தொடர்பாக நிறைய முக்கியமான விதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் காய்ச்சல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்கள் யாரும் கடைக்கு செல்ல கூடாது. இவர்களை கடைக்கு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது. எல்லா வாடிக்கையாளர்களும் கடைக்கு செல்லும் முன் கைகளை கழுவ வேண்டும். அதேபோல் கடையை விட்டு வெளியே செல்லும் போதும் கைகளை கழுவ வேண்டும். இதற்கான கிருமி நாசினி வசதியை கடைகள் அனைத்திலும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
கடைக்கு செல்லும் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம். மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாது. அவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. அதே சமயம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் பணியாளர்கள் கடையில் பணிகளை செய்ய வேண்டும். சரியான சமூக இடைவெளியை மக்கள் கடைகளில் பின்பற்ற வேண்டும்.
கடைகளுக்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட்டு இருக்க வேண்டும். இந்த வட்டங்களில் மட்டுமே மக்கள் நிற்க வேண்டும். கடையில் தேவையில்லாமல் எதையும் தொட கூடாது. காய்கறிகளை தொட்டால் அதை வாங்க வேண்டும். அதேபோல் வீட்டிற்கு சென்றதும் மக்கள் தங்கள் கைகளை கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகள் மற்றும் கால்களை கழுவ வேண்டும்.