கொரோனா வைரஸ் பாதிப்பு, சமூகத்தில் இருந்தாலும், நாம் அதனுடன் தொடர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும், மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 1,273 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
ஒருபக்கம் அதிகப்படியான மக்கள் பாதிப்பை சந்தித்து வந்தாலும் கூட, மற்றொரு பக்கம் குணமடையும் விகிதம் என்பது அதிகரித்துள்ளது. தற்போது குணமடையும் விகிதம் என்பது 29.6 என்ற அளவில் உள்ளது. இதுநாள் வரையில் 16 ஆயிரத்து 540 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37 ஆயிரத்து 916 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்வது உள்ளிட்ட விவகாரங்கள் தற்போது சர்ச்சைக்குரியதாக பேசப்படுகின்றன. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த வைரசுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் அதனால் நாம் பாதிக்கப்படாத அளவுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.