நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் மிக கொடூரமாக அரங்கேறின.. தந்தையை வெட்டிய மகன், அண்ணனை குத்தி கொன்ற தம்பி, தங்கையை வெட்டிய அண்ணன், தாய், மகள் தீக்குளிப்பு போன்ற அனைத்து வன்முறை சம்பவங்களும், கொலைகளும் போதை தலைக்கேறியதால் நடந்துள்ளது என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
45 நாட்கள் கழித்து திறந்ததாலோ என்னவோ கட்டுக்கடங்காமல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழிந்தனர்.. கடையை திறக்கும் முன்பே அவர்களின் முகங்களில் அப்படி ஒரு மலர்ச்சி.. மழை, வெயில் எதுவுமே அவர்களுக்கு தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறிதான் நேற்று கடைகள் திறக்கப்பட்டன… வன்முறைகள் பெருகும் என்று கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் எச்சரிக்கையும் செய்தனர். எனினும் போலீஸ் பந்தோபஸ்துடன் விநியோகம் நடந்தது. எதிர்பார்த்ததுபோலவே குடிகாரர்களால் வன்முறைகள் மாநிலமெங்கும் வெடித்து கிளம்பின.
தஞ்சை கீழ்வாசலை சேர்ந்தவர் அருண்குமார்.. சமூக விலகலை பற்றி யோசிக்கவே இல்லை.. சரக்கு வாங்கி தனியாக சாப்பிடாமல், இந்த நேரத்திலும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட நினைத்துள்ளார்.. எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும்போது தகராறு வந்துவிட்டது.. சக ரவுடிகள் அருண்குமாரை வெட்டியே கொன்றனர்.. இதுகுறித்து தஞ்சை கிழக்கு காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவருக்கு 80 வயதாகிறது. 4 மகன்கள் இருக்கிறார்கள். கடைசி மகன் குருவையாவுக்கு 45 வயதாகிறது. எந்த வேலை வெட்டிக்கும் போவது இல்லை. ஆனால் மதுப்பழக்கம் மட்டும் உள்ளது. அப்பாவுடன் சொத்து தகராறு செய்து வந்திருக்கிறார். நேற்று கடையை திறந்ததும் முதல்வேலையாக சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகன், 45 நாள் பிரச்சனை செய்யாமல் நேற்று சொத்து விவகாரத்தை ஆரம்பித்துள்ளார். போதை தலைக்கேற பெற்ற அப்பாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார். அவரை சேத்தூர் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே திருமங்களம் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் விஜயன். கூலி வேலை செய்பவர். 45 வயதாகிறது. அதேபகுதியை சேர்ந்த பாபு என்பவர் இவர் நண்பர்.. 2 பேரும் சேர்ந்து குடித்தனர். சண்டை வந்துவிடவும், பாபு ஒரு கட்டை எடுத்து விஜயனை அடித்து தாக்கினார். விஜயன் சுருண்டு விழுந்து இறந்தார். இது குறித்து விசாரணை நடக்கிறது.
இதேபோல திருச்சியில் மாட்டு வண்டிக்காரர் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். குழுமணி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் மாட்டு வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் அண்ணன் – தம்பியான வெங்கட், கோபி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று ரஞ்சித்குமாரும் குடித்தார். அண்ணன் தம்பிகளும் குடித்தனர். பிறகு ரஞ்சித்குமாரை அண்ணனும், தம்பியும் சேர்ந்து அரிவாளால் சரமாரி வெட்டி கொன்றனர். இருவரையும் ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.
இதைவிட கொடுமை திருச்சி பெரியகடை வீதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் டாஸ்மாக் கடைக்கு வந்தார். சரக்கு வாங்கி அங்கேயே குடித்துவிட்டு, விழுந்து கிடந்தார். சாயங்காலம் வரை கிடந்தவரை தட்டி எழுப்பும்போதுதான் மூச்சு பேச்சே இல்லை.. தகவல் அளிக்கப்பட்டு போலீசார் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் எந்த ஊர் என்று விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சொந்த தங்கையை கட்டையால் தாக்கி அண்ணனே கொலை செய்துவிட்டார். தங்கை பெயர் அம்சவள்ளி. 20 வயதான இவர் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இது அம்சவள்ளி அண்ணன் கணேஷ்பாபுவிக்கு பிடிக்கவில்லை. நேற்று கணேஷ்பாபு மதுஅருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து தங்கையிடம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். இறுதியில் போதை தலைக்கேற கட்டையால் அம்சவள்ளியை கொடூரமாக தாக்கி கொன்றார்.
இது எல்லாவற்றையும்விட அதிர்ச்சி கலந்த சம்பவம் மதுரை அலங்காநல்லூரில் அரங்கேறியது. அப்பா சிவக்குமார் மீது 18 வயது மகள் அர்ச்சனாவுக்கு பிரியம் அதிகம். மது சாப்பிடக்கூடாது என்று மகள் ஏற்கனவே அப்பாவுக்கு அறிவுறுத்தி வந்துள்ளார். ஆனால் சிவக்குமார் நேற்று காலையிலேயே மது வாங்கி குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் மனைவி பரமேஸ்வரியும், மகள் அர்ச்சனாவும் தகராறில் ஈடுபட்டனர். மகளுக்கு அப்பா தண்ணி அடித்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. இதனால் மனைவி – மகள் இருவருமே மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை, குத்து, சம்பவங்களுக்கிடையே போதையில் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்ட சம்பவங்களும் கோவை தொண்டாமுத்தூர் பகுதி உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
நடந்த இந்த கொலைகளை எல்லாம் கவனித்தால், பெரும்பாலும் பழைய பகைகள்தான். மறந்துபோன முன்விரோதங்கள்தான்.. போதை தலைக்கேறியதும், புதைந்துபோன பழைய சமாச்சாரங்கள் எல்லாம் வெளியே வந்து வன்முறைகளாக நடந்துள்ளன. எல்லா முன்விரோதங்களும் இதற்கு முந்தைய காலகட்டங்களில் இவர்களுக்கு இருந்து வந்த ஒன்றுதான். இநத் 45 நாளும் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தவர்கள், தண்ணியை போட்டதும், கண்மூடித்தனமாக நடந்து கொண்டு தாறுமாறாக வெட்டி சாய்த்துள்ளனர். நேற்று கடை திறந்த முதல் நாளே இவ்வளவும் நடந்துள்ள அதிர்ச்சியில் இருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வரவே இல்லை.