அதிரையில் 32 குடும்பங்களுக்கு அனுமதி அட்டையை பெற்றுக்கொடுத்த அதிரை எக்ஸ்பிரஸ்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிரையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தடைக்காலத்தில் வெளியில் செல்வதற்கான அடையாள அனுமதி அட்டைகளை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அட்டை விநியோகத்தின் போது வீடு பூட்டிருத்தல் உள்ளிட்ட காரணங்களால் விடுபட்டவர்கள் அதிரை எக்ஸ்பிரசின் தெருவாரியான வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் தெரிவித்தனர். இதனை அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் பழனிவேலின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டு சென்றது. இதனையடுத்து விரைவாக செயல்பட்ட அவர், உடனடியாக களத்திற்கு நேரில் சென்று அனுமதி அட்டைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கான அடையாள அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், சிலர் இதில் விடுபட்டிருந்தால் பேரூராட்சி அலுவலகத்தை அணுகி அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
இதனிடையே வெளியில் செல்வதற்கான அடையாள அட்டை கிடைக்காதவர்கள் அதிரை எக்ஸ்பிரசின் 95510 70008 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவை நமது பகுதி நிரூபர்களால் வீடு தேடி வந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
செவ்வாய்க்கிழமை மட்டும் அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் 32 குடும்பங்களுக்கு அனுமதிக்கான அட்டை பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.