கொரோனா தொற்றின் பரவலையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருவதற்குண்டான வண்ண அட்டைகளை ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.
அதன்படி மல்லிப்பட்டிணம் பகுதியில் வெள்ளி மற்றும் செவ்வாய் மட்டுமே வெளியே வருவதற்குண்டான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கி இருக்கிறது. மேலும் அனைத்து கடைகளையும் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும், நாளையில் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று திடீரென இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு நாளை பகல் 1 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.