உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது குறித்து மக்களிடையே அச்சத்தை போக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அதிராம்பட்டினத்தில் கடற்கரைத்தெரு மற்றும் ஹாஜா நகர் இளைஞர்கள் சார்பில் அப்பகுதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விளக்கியும் கூறினர்.
மேலும் நாளை வெள்ளிக்கிழமை அதிரையில் உள்ள ஜுமுஆக்களில் கொரோனா குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.