கொரோனாவை விட ரொம்ப மோசமான விளைவை இந்த பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன் விஜய் என்ன தீவிரவாதியா என்ற கேள்வியை கேட்டதுடன், ராஜேந்திர பாலாஜி என்ன அதிமுக அமைச்சரா? இல்லை, ஆர்எஸ்எஸ் அமைச்சரா? என்று ஒட்டுமொத்த விவகாரத்தையும் ஒரே பேட்டியில் கொண்டுவந்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மற்றும் பரபரப்பு செய்திகள் குறித்து பேசினார். அவர் சொன்னதாவது:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது… ஆனால் இங்கே பாஜக அரசு அந்த கொரோனா வைரஸை விட ரொம்ப மோசமா இருக்கே.. அந்த வைரஸை விட மோசமான விளைவுகளை தந்து மக்களை வாட்டி வதைக்கிறது.
பட்ஜெட்டில் பலனில்லாத பல அறிவிப்புகள் உள்ளன.. அதை கண்டித்து வருகிற 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்’ என்றார். இதையடுத்து விஜய் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ‘ஷூட்டிங் நடக்கிற இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. அந்த அளவுக்கு விஜய் ஒன்றும் தீவிரவாதி இல்லை.. பல படங்களில் அவர் பாஜக அரசை விமர்சித்துள்ளார்.. அந்த காரணத்திற்காகத்தான் இந்த வருமான வரித்துறை சோதனை இருக்கலாம்’ என்று பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.