அதிராம்பட்டினம் ஏறத்தாழ 1 லட்சம் மக்கள் வசிக்கும் பேரூராக உள்ளது. பள்ளி கல்லூரி என மிடுக்காக காணப்படும் இவ்வூரில் பெரும்பாலான மக்கள் பொருளீட்டுவதற்காக கடல் கடந்து அயல் நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இதனால் தங்களின் பிள்ளை செல்வங்கள் எவ்வாறு வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கின்றனர் ? யார் யார் கூட நட்பு வைத்து இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள இயலாது. இதனால் ஊரில் சிலர் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வாழ்வை கேள்விகுறியாக்கி கொண்டனர்.
இவர்களுக்கு மத்தியில் சில நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லூரி மாணவர்கள் சிலரால் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினை உருவாக்கி ஆதரவற்ற நபர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தங்களுக்கு பெற்றோர்களால் வழங்கப்படும் பாக்கெட் மணியிலிருந்து இவ்வாறான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் உணவகங்கள், திருமண வைபவங்களில் மிஞ்சும் உணவுகளை பசியால் தவிக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உன்னத பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.