இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர தமுமுக மற்றும் மமக சார்பில் நேற்று (27.01.2020) திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு கண்டன மற்றும் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் தக்வா பள்ளி அருகே நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகிக்க, M.நசுருத்தீன் சாலிகு, மாவட்ட உறுப்பினர்கள் சாதிக் பாட்சா, செய்து புகாரி, முகமது யூசுப், பீர் முகம்மது, தமீம் அன்சாரி, அப்துல் ஜப்பார், அப்துல் அஜீஸ், அதிரை நகர தமுமுக தலைவர் நெய்னா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்க மாநில துணைச் செயலாளர் C.சுந்தரவள்ளி, மமக பொதுச் செயலாளர் P.அப்துல் சமது, தஞ்சை I.M.பாதுஷா , ராவியத் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதனையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், புதுடெல்லி JNU,AMU,JAAMIYA பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பது, முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு துணை புரியும் தமிழக அரசை கண்டிப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தின் இறுதியாக அதிரை நகர தமுமுக உறுப்பினர் S.A.இத்ரீஸ் நன்றியுரை கூறினார். 2500க்கும் மேற்பட்டோர் இப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.