இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்திற்கு சுகோய் போர் விமானத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி பதூரியா ஆகியோர் சுகோய் விமானத்தை தஞ்சை விமானப்படை தளத்திற்கு அர்ப்பணித்தனர். அப்போது விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தண்ணீரை பீய்ச்சியடித்து சுகோய் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்துக்கு ஏவுகணை தாங்கிய அதிநவீன சுகோய் – 30MKI விமானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுகோய் விமானத்தைக் கொண்டுள்ள 12வது தளம் என்ற பெருமையை தஞ்சை விமானப்படைத்தளம் பெற்றுள்ளது. இதில் 11 விமானப்படை தளங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் இருக்கும் நிலையில், முதன்முறையாக தென் இந்தியாவில் சுகோய் போர் விமானம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.