மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்சில் இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறுவதை காரணம் காட்டி இவ்வழக்குகளை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் கைவிடப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்நிலையில் கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் சி.ஏ.ஏ., அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கேரளா அரசு ஏற்கனவே சட்டசபையில், சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் முதல் மாநில அரசும் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.