உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்.
துணைத் தலைவர், துணை மேயர், ஆகிய பதவிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை மையமாக வைத்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், உள்ளாட்சித் தேர்தல் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போக கூடுமோ என விவாதம் உருவாகியுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துணை மேயர், துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரும் விவகாரத்தில் தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்தும் பதில் அளிக்கவில்லை என்பது இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனின் வாதம்.
இந்நிலையில் செ.கு.தமிழரசன் மனுவில் குறிப்பிட்டுள்ள புகார் தொடர்பாக ஜனவரி 7-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.