ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித், ஒருநாள் முடிந்து இரண்டாம் நாள் தொடங்கி உள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் சாப்பாடு, தண்ணி இல்லாமல் சுஜித் எப்படி இருக்கிறானோ என்ற கவலை பொது மக்களை கவ்வி உள்ளது. 85 அடிக்கு போன குழந்தை 100 அடிக்கு கீழே போயுள்ளது கலக்கத்தை தந்து வருகிறது. இதையடுத்து, பக்கவாட்டில் சுரங்கம் போல இன்னொரு குழியை தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 5.40 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, மாநில, தேசிய மீட்பு குழுவினர் சுஜித்தை பத்திரமாக மீட்க 4 மணிநேரத்துக்கும் மேலாக கடுமையாக போராடினார்கள்.
பல வழிகளில் முயன்றும் அது பலன் தராமல் போனதால் தற்போது சிறுவனை அப்படியே சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறையில் மேலே தூக்கும் முயற்சிகளை செய்தனர். இதை தவிர, கைபோன்ற வடிவுள்ள ஹைட்ராலிக் இயந்திரம் உள்ளே இறக்கப்பட்டு, அதன்மூலம் குழந்தையை அலேக்காக தூக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, குழந்தையை சுற்றியிருந்த மண்ணை அகற்றும் பணி தீவிரமானது. ஆனால், முழுமையாக மண்ணை அகற்ற முடியாமல் போனது. இதனால், குழந்தையின் தலைமீது 2 அங்குல மண் உள்ளதாக கூறப்படுகிறது.
எடுக்கப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொரு பக்கம் முயற்சி மேற்கொள்கின்றனர். அதாவது கிணறுக்கு 3 மீட்டருக்கு அருகிலேயே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.
இவர்களுடன் தனியார் அமைப்பும் இணைந்து இந்த போர்வெல் போடும் வேலையில் இறங்கி உள்ளனர். இதன்மூலம் குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இதையடுத்து, என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க மற்றொரு புறம் முயற்சி எடுத்து வருகின்றனர். கிணறுக்கு அருகிலேயே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
குழந்தை ஏற்கனவே 80 அடியில் இருந்து 85 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டான். அதனால் பக்கவாட்டில் இந்த குழியை போடுவதால், குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த முறை வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட முறை என்கிறார்கள். அதனால் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ஒரு மீட்டர் தொலைவில் 90 அடி ஆழத்துக்கு இந்த சுரங்க அளவிலான, அதாவது ஒரு ஆள் உள்ளே இறங்கும் அளவுக்கு குழி தோண்டும் முயற்சியில் இறங்கி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை 100 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனால் தோண்டும் பள்ளத்தின் அளவும் அதிகரிக்கப்படும் என்றே தெரிகிறது.
இந்த குழியை தோண்ட எப்படியும் 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகும் என்றார்கள். இந்த குழியில் 2 தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி குழந்தையை மீட்கவும் முடிவு செய்துள்ளனர். குழந்தை விழுந்து 2-ம் நாள் தொடங்கி உள்ளது. இவ்வளவு நேரம் சாப்பாடு, தண்ணி இல்லாமல் குழந்தை இருக்கிறான்.. விடிகாலையிலேயே அவனது சத்தமும் கேட்கவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அவனது நிலை தற்போது எப்படி இருக்கிறது என்ற பதட்டம் அதிகரித்துள்ளதுடன், பிரார்த்தனையும் வலுவடைந்து வருகிறது.