ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 2-ம் தேதி புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர்.
பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர் நாட்டுப்படகை வாங்கினர். பிறகு 3-ம் தேதி அந்தப் புதிய படகின் மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் முனியாண்டி, ரஞ்சித்குமார், மதன், இலங்கேஸ்வரன், தரைக்குடியான், காந்தி குமார், செந்தில்குமார், முனீஸ்வரன், உமாகாந்த், காளிதாஸ் உள்ளிட்ட பத்து மீனவர்கள் வந்தனர்.
அப்போது தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது பகல் 12 மணியளவில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து உயிருக்குப் போராடினர். செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்தனர்.
இந்த நிலையில், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது படகில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்களையும் உயிரோடு மீட்டுக் கொண்டுவந்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, இன்று மயங்கிய நிலையில் நான்கு மீனவர்களை மீட்டதுடன் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், நான்கு மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகின்றது.