காவல் துறையில் பணியாற்றும் போலீசார் யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற தீர்ப்பில் தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மாமூலாக பணம் பெறுவது பொதுமக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றும் போலீசார், ஊரக பகுதிகளில் பணியாற்றும் போலீசார் எல்லா இடங்களிலும் லஞ்சம் பெறுகின்றனர். மார்க்கெட், கடைகள், உணவகங்கள் என பல்வேறு இடங்களில் இருந்தும் போலீசார் பரிசுப்பொருட்கள், அன்பளிப்புகளை பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சட்டவிரோதமாக பணம், மாமூல் பெறுவது ஊழல் தடுப்பு சட்டம் 1988 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். போலீசார் லஞ்சம், மாமூல் வாங்குவது தெரியவந்தாலோ, கண்டறியப்பட்டாலோ, அது தொடர்பான ஆவணங்கள் கைபற்றப்பட்டாலோ லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதை தொடர்ந்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே, தமிழக காவல் துறையில் உள்ள அதிகாரிகள் விதிகளை முறையாக பின்பற்றி, திடீர் சோதனை நடத்தி, சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்..