நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது பைசான், கடந்த 9ம் தேதி தான் மாட்டுக்கறி சூப் குடிக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முஹம்மது பைசான், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் எதை சாப்பிட வேண்டும் என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ட்விட்டரில் #beef4life மற்றும் #WeLoveBeef என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளன. இந்த ஹேஷ்டேக் மூலம் மாட்டிறைச்சிக்கு தங்களின் ஆதரவு மற்றும் அது தொடர்பான கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.