கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. அச்செய்தியில் அதிரையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த பெண்ணின் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது போன்றவைகள் இடம்பெற்றிருந்தின.
இதுகுறித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்மணி, அதிரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வருகிறது. அந்த வதந்தியில், எனக்கும் எனது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு என்னை எனது கணவர் கொலை செய்துவிட்டார், இதனால் எனது குழந்தைகள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். எனது கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது போன்ற உண்மைக்கு மாறான வதந்தியை எனது சகோதரர் ஹபீப் ரஹ்மான் பரப்பிவிட்டுள்ளார். எனவே அவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக வதந்தியை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுனரான ஹபீப் ரஹ்மானை அதிரை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக ஹபீப் ரஹ்மான் வதந்தியை பரப்பியது தெரியவந்தது. மேலும் தாம் பரப்பியது வதந்தி என்றும் அவரே ஒத்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து அதிரை காவல்துறையினர் ஹபீப் ரஹ்மானிடம், இனிமேல் இதுபோன்ற வதந்திகளை பரப்பக்கூடாது என எழுத்து மூலமாக எழுதி வாங்கிக்கொண்டு அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.