தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அத்திட்டங்களை கைவிடக்கோரியும் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று 23/06/2019 மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 550 கிமீ தூரத்திற்கு நடைபெற உள்ள இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினத்தில் நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்க இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.