சென்னைக்கு குடிநீர் தந்து உதவுகிறோம் என்ற கேரள அரசின் அறிவிப்பினை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்த மாநிலமும் சீர்குலைந்து போனது.இதையடுத்து தமிழகத்திலிருந்து கேரள மக்களுக்கு பெருமளவில் உதவிகள் குவிந்தன. இதை கேரள மக்களே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு தமிழக மக்கள் தங்களது மனித நேயத்தைக் காட்டினர்.
சென்னையிலிருந்து மிகப் பெரிய அளவில் உதவிகள் போயின. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்தனர். ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கார்கள் என அனைத்து விதத்திலும் உதவிகள் கேரளாவுக்கு ஓடின.
பால் பொருட்கள், குடிநீர், நாப்கின், அரிசி, மருந்துகள் என விதம் விதமான பொருட்களை டன் கணக்கில் சென்னை மக்கள் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். இப்போது அந்த நன்றியை கேரள மக்கள் நமக்குத் திருப்பிச் செலுத்தவுள்ளனராம். அதாவது குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் சென்னைக்கு தண்ணீர் அனுப்பவுள்ளது கேரளா.
கேரளாவிலிருந்து சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை சென்னைக்கு அனுப்ப கேரள முதல்வர் பினரயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னை மக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக பினராயி விஜயன் சொல்லி உள்ளார்.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மூலமாக இந்த தண்ணீர் அனுப்பப்பட உள்ளதாகவும், தூய்மையான முறையில் சுத்திகரிப்பு செய்த தண்ணீரை சென்னைக்கு கேரள அரசு அனுப்பி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் கேரள அரசின் இந்த உதவியை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை தமிழக அரசால் சமாளிக்க முடியும் என்று கூறி இந்த உதவியை தமிழகம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.