லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியும் பிரச்சார களத்தில் குதித்து இருக்கிறது. நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதற்காக இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார்.
சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்று அங்கு நடக்கும் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் அவர் செய்தியாளர்களை சந்திக்க போகிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
இவருடன் திமுக தலைவர் ஸ்டாலினும் விமானத்தில் செல்கிறார். பின் அங்கிருந்து இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்கள். இன்று மாலை இந்த பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் நடத்தும் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.