லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் சென்னையில் இன்று கையெழுத்தானது.
பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு பாமகவை எப்படியாவது அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக இருந்தன.
இதையடுத்து அன்புமணி ராமதாஸ் மூலமாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு தூதுவிட்டது பாஜக தலைமை. இந்த நிலையில் சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக தேர்தல் பணிக் குழுவை சேர்ந்த அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற நிலையில், இன்று ராமதாசுடன் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் நேரடி சந்தித்தனர். ராமதாஸுக்கு பொன்னாடை போர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதையடுத்து, அதிமுக-பாமக நடுவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.