ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், அதையும் சந்திக்கத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அப்போது, சி.பி.ஐ அதிகாரிகளை மாநில காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மாநிலம் முழுவதும் பேரணி நடைபெறும் என்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டர் பதிவில், ‘மாநிலம் முழுவதும் இன்று மதியம் 2-4 மணி வரை பேரணி நடைபெறவுள்ளது.
பேரணியில், கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு கொடியுடன் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். நாங்கள் பயப்படவில்லை. ஒருவேளை அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், அதையும் சந்திக்கத் தயார். 2019 மக்களவைத் தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.