பிறந்து ஒரு மாதமே ஆன அழகான பெண் குழந்தையை கடும் குளிரில் வீசிச் சென்ற கொடூரத்தில் ஒசூர் நகர மக்கள் உறைந்துள்ளனர்.
எப்பவுமே ஓசூர் உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். விவசாயிகள் விளைபொருட்களை விடிகாலையிலேயே இங்கு கொண்டு வர ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் இன்று காலையும் சந்தைக்கு வந்தார்கள்.
அப்போது சந்தை அருகில் திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் சுற்றுமுற்றும் தேடி பார்த்தபோது, பிறந்த ஒருமாதமே ஆன பெண்குழந்தை இருப்பதை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இப்போது தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்தாலும், ஓசூரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் விடிகாலை நேரத்தில் இந்த பச்சிளம் குழந்தையை வெறும் துணியால் சுற்றி யாரோ வீசி எறிந்து சென்றதை அறிந்து விவசாயிகள் உட்பட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அனைவருமே கலங்கி விட்டார்கள்.
உடனடியாக இது குறித்து ஓசூர் நகர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓசூர் உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை போட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எத்தனையோ பேருக்கு பிள்ளை பாக்கியம் இல்லாதபோது, இப்படி தமிழகத்தில் குழந்தைகளை ரோட்டோரம் வீசி செல்லும் அவலம் அதிகரித்தே வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.