திருவாரூர் இடைத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக இன்றுதான் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமமுக தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளது. ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கடந்த 3ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.
கடந்த சில நாட்களாக திருவாரூர் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாரை வேட்பாளராக நிறுத்த போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. அதிமுக, திமுகவை எதிர்த்து அமமுக சார்பாக யார் நிற்க போகிறார்கள் என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய சஸ்பென்ஸாக இருந்தது.
இதற்காக கடந்த இரண்டு நாட்களாக அமமுக சார்பாக டிடிவி தினகரன் தலைமையில் இதற்காக ஆலோசனை கூட்டம் நடந்தது. சில முக்கிய உறுப்பினர்களுடன் தினகரன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் தொகுதியில் இவர் மிகவும் பிரபலமான நபராகவும் இருந்து வருகிறார்.
ஏற்கனவே திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.