அண்மையில் கஜா புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் சிதறுண்டன. புயல் தாக்கி ஒரு மாத காலமாகியும் மக்கள் இன்னும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ரூ.15,000 கோடி நிதியுதவி கேட்டது. மத்திய அரசு ரூ.353 கோடி மட்டுமே இடைக்கால நிதியாக அளித்துள்ளது. கேட்டது 15,000 கோடி… கிடைத்ததோ சிறு தொகை. இக்கட்டான நிலையில், ஒரு மாநில அரசு தவிக்கும்போது மத்திய அரசால் இவ்வளவுதான் தர முடிகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் இருந்துதான் மத்திய அரக்கு ஜி.எஸ்.டி வருவாய் கொட்டுகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் அதிகமாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கிறது. எனினும், மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதே உண்மை.
தமிழகத்துக்கு முன்னதாக கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கேரள அரசு ரூ.30,000 கோடி மதிப்புக்கும் சேதக்கணக்கு சொன்னது. மத்திய அரசிடம் இருந்து கேரள அரசுக்கு இடைக்கால நிதி ரூ.2,600 கோடி மட்டுமே கிடைத்தது. இயற்கை பேரிடர் காலங்களில் கைகொடுத்து காக்க வேண்டிய மத்திய அரசு கண்டும் காணாதது போல உள்ளது.. மத்திய அரசு நிதி வைத்துக் கொண்டே தமிழகத்தை வஞ்சிப்பதாக வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். வைகோவின் கருத்து உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக மத்திய அரசு தற்போது அண்டை நாடுகளுக்கு நிதியை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி இந்தியாவுக்கு வருகை தந்தார். மாலத்தீவு அதிபர், மோடியைச் சந்தித்தபோது, 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதில், மாலத்தீவில் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்காக இந்தியா ரூ.10,000 கோடி வழங்கும் ஒப்பந்தமும் ஒன்று. மாலத்தீவைத் தொடர்ந்து பூடான் பிரதமர் லோஸே டிஸ்ஸெரிங் இந்தியாவுக்கு வருகை தந்தார். பல்வேறு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகின. பூடானுக்கு 5 ஆண்டுகளுக்குள் ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
கஜா புயல் சேதங்களைப் பார்வையிட இதுவரை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. மத்திய அரசு அமைத்த குழுவினர்தான் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் சொற்ப பணமே தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. சொந்த நாட்டு மக்கள் இயற்கைப் பேரிடரில் சிக்கி தவித்துக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு மத்திய அரசு நிதியை அள்ளி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியை தமிழக மக்களிடையே எழாமல் இல்லை.
தனக்குப் போகத்தான் தானம் என்கிற சொலவடை நினைவுக்கு வருகிறது.