அதிரையில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு தீவிர கை, கால் வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கஜா புயலுக்கு பிறகு அதிரையில் சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையாலும் பொதுமக்களுக்கு தீவிர காய்ச்சல் ஏற்படுகிறது. தீவிர மூட்டு வலியுடன் இக்காய்ச்சல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் பொதுசுகாதாரத்துறையும் இவ்விஷயத்தில் அலட்சியத்துடன் செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு மற்றும் கொசுக்களின் அதிகரிப்பு ஆகியவையே இக்காய்ச்சலுக்கு மிக முக்கிய காரணம். அதிரை பேரூராட்சி நிர்வாகமும் குப்பைகள் அள்ளும் விஷயத்திலும், கொசு மருந்து அடிக்கும் பணியிலும் அலட்சியமாக இல்லாமல் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிரையில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பாக அரசின் பொதுசுகாதாரத்துறைக்கு முக்கிய கோரிக்கை :
1. அரசு சார்பில் அதிரையில் அதிகமான காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த வேண்டும்
2. அதிரை முழுவதும் குப்பைகளை அகற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
3. அதிரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து, அது என்ன வகையான காய்ச்சல் என்பதை உறுதி செய்ய வேண்டும்
4. அனைத்து மருத்துவமனைகளிலும், ரத்த பரிசோதனை கூடங்களிலும் ஆய்வு செய்யப்பட்ட ரத்த மாதிரிகளை அரசு கவனத்தில் கொண்டு விரைந்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்
5. அதிரை முழுவதும் கொசுவை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணியை அதிரை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
அதிரையில் தொடர்ந்து பரவி வரும் மர்மகாய்ச்சல் குறித்து அரசு இனியும் அலட்சியம் செய்யாமல் விரைந்து செயல்பட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா ?
பொறுத்திருந்து பார்ப்போம்.