கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் புதுப்பட்டினத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. மேலும் நிவாரண பொருட்கள் வழங்கும் விஷயத்தில் கிராம அலுவலர், கிராம வருவாய் அலுவலர் ஆகியோர் ஒருதலைபட்சாமாக நடந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியரும், ஒரு வாரத்திற்குள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, புதுப்பட்டினத்துக்கு வரவேண்டிய அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகத்திடம் உறுதி தெரிவித்துள்ளார்.