தஞ்சை மாவட்டம், திருவிசநல்லூரில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பிரமாண்டமான 9 அடி உயர பஞ்சமுக மகாமங்கள பிரத்தியங்கிராதேவி தனி சன்னதி கொண்டுள்ளார்.
வரும் 15ம் தேதி கஜா புயல் தமிழகத்தில் கரை கடக்கலாம் என எதிர்பார்த்து உள்ள நிலையில், புயல் கரை கடக்கும்போது பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் பொதுமக்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டி நேற்று நிகும்பலா மகாயாகம் நடந்தது. பக்தர்கள் கொண்டுவந்த வற்றல் மிளகாய்கள் மூட்டைமூட்டையாகவும், யாகத்திற்காக தயாரிக்கப்பட்ட 1008 லட்டுகளையும், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பல்வேறு பழவகைகள், மூலிகைகள், பட்டுபுடவைகளும் யாகத்தீயில் இடப்பட்டன.
தொடர்ந்து 2 மணிக்கு பூர்ணாஹூதி நடந்து மகாதீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கடம்புறப்பாடு நடந்து பிரத்தியங்கராதேவிக்கு பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. வளையல் அலங்காரம் செய்வித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.