பட்டுக்கோட்டையில் குளத்தில் மயங்கி விழுந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்து குளத்தில் விழுந்தார். அவருடைய பெயர் செல்லக்கண்ணு(வயது 68). குளத்தில் மயங்கி விழுந்த அவர் சுமார் அரைமணி நேரம் குளத்திலேயே மிதந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு இருந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விதைகள் அமைப்பினரும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உடனே அவர்கள் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் அந்த மூதாட்டியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அம்மூதாட்டி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர் காக்கும் சேவையில் விரைந்து செயல்பட்டு மூதாட்டி ஒருவரின் உயிரை காப்பாற்றிய விதைகள் அமைப்பினரையும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.