கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்னும் இந்தப் போட்டிகள் தொடங்காத நிலையில், ‘2023-ம் ஆண்டில் நடக்க உள்ள 13-வது ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும்’ என்று அடுத்த உலகக்கோப்பை நடைபெற உள்ள இடத்தை முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ரிச்சர்ட்சன் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, “முதல்முறையாக நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் ஆண்கள், பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதன்பின், 2021-ல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் 2021-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பைப் போட்டியும், 2023-ல் ஆண்கள் உலகக்கோப்பைப் போட்டியும் நடைபெற உள்ளது”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரிச்சர்ட்சன், “தற்போது இந்தியா சிறப்பாக விளையாடிவருகிறது. இங்கிலாந்தும் சிறந்த ஒருநாள் அணியைக் கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நானும் உங்களைப்போல இந்தத் தொடரை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.