இந்தோனேசியாவை மீண்டும் ஒரு சுனாமி தாக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய மிகப் பெரிய ஆசியன் சுனாமி தாக்குதல் ஏற்படுத்திய வடுவை உலக மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை.
இன்று தாக்கிய சுனாமியானது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் உயிரிழப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளது.
பூமியின் மிகவும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக இந்தோனேசியா திகழ்கிறது. அதிக அளவில் நிலநடுக்கங்களையும், சிறிய அளவிலான சுனாமிகளையும் சந்திக்கும் பகுதி இது. பசிபிக் அக்னி வளையப் பகுதியில் இது அமைந்துள்ளது. இங்குதான் உலகிலேயே அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட மிகப் பயங்கரமான நிலநடுக்கமானது வரலாறு காணாத சுனாமி தாக்குதலை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 100 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் சுமத்ரா பெரும் சேதத்தை சந்தித்தது.
14 நாடுகளில் இந்த சுனாமி பெரும் உயிரிழப்புகளையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமி தாக்குதல் இது.
இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் மசூதி ஒன்று பலத்த சேதமடைந்தது. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மாடிகளில் தஞ்சமடைந்தனர்.
இருப்பினும் ஆர்பரித்து வந்த சுனாமி பேரலை கடற்கரையோ கட்டிடங்களை தாக்கியது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுனாமியால் பலு பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.